வெள்ளி, 25 மார்ச், 2011

மஞ்சள்காமாலை


மஞ்சள்காமாலை
மஞ்சள்காமாலை ஏன் ஏற்படுகிறது? அதை தவிர்ப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம்.
நம் உடலில் உள்ள மிகச்சிறந்த ஒரு உறுப்பான கல்லீரல் சுரக்கின்ற பித்தநீரின் அளவு இரத்தத்தில் அதிகமாகி பித்தப்பை பாதிக்கப்படுவதைத்தான் மஞ்சள்காமாலை என்று கூறுகிறோம்.
மஞ்சள் காமாலை நோயாளிக்கு தோல் மஞ்சளாகவும், கண்களின் வெண்படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும் காணப்படும்.
மஞ்சள் காமாலையில் சில முக்கிய வகைகள் உண்டு.
1. அப்ஸ்ட்ரக்டிவ் மஞ்சள்காமாலை - Obstructive jaundice
அப்ஸ்ட்ரக்டிவ் (Obstructive) என்றால் அடைப்பு என்று பொருள். பொதுவாக பித்தநீர் கல்லீரலால் சுரக்கப்பட்டு பித்தநீர் குழாய் வழியாக பித்த நீர்ப்பைக்கு அனுப்பப்படுகிறது. பித்த நீர்ப்பை அதை சேகரித்து வைத்துக் கொண்டு உணவு செரித்தலுக்கு குறிப்பாக கொழுப்பு சத்துள்ள உணவு செரித்தலுக்கு தேவையான பித்த நீரை அனுப்பும் வேலையை செய்கிறது.
இந்த அப்ஸ்ட்ரக்டிவ் மஞ்சள்காமாலை என்பது கல்லீரலால் சுரக்கப்பட்ட பித்தநீர் பித்த நீர்க்குழாயில் கொலஸ்ட்ரால், பித்தக் கல் போன்றவற்றில் ஏற்படும் அடைப்பின் காரணமாக பித்த நீர்ப் பையை அடையாமல் குடலுக்குச் சென்று விடுகிறது. இவ்வாறு அடைப்பின் காரணமாக ஏற்படும் காமாலைக்கு அப்ஸ்ட்ரக் டிவ் ஜான்டீஸ் என்று பெயர். இதில் சிறு நீர்கருப்பு நிறத்திலும் மலம் வெளுத்தும் காணப்படும்.
2. ஹெப்பட்டோ- செல்லுலார் ஜான்டீஸ் Hepatocellular jaundice
இது இரண்டாவது வகை மஞ்சள் காமாலையாகும். இவ்வகை கல்லீரல் செல்கள் சில நோய்களால் பாதிக்கப்படும் போது உண்டாகிறது. இவ்வாறு கல்லீரலானது நோயால் பாதிக்கப்படும்போது அது தன் வேலையை சரிவர செய்ய முடியாத நிலையில் குறிப்பாக தன் வேலையில் ஒன்றான பித்த நீரை, பித்தப்பைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படுவதால், கல்லீரலால் சுரக்கப்படும் அந்த பித்தநீர் அங்கேயே தங்கி, ரத்தத்தில் கலந்து தேங்கிவிடுவதால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்குத்தான் ஹெப்பட்டோ- செல்லுலார் ஜான்டீஸ் என்றுபெயர். இவ்வகை நோயாளிகளுக்கு சிறுநீர் அடர்கருப்பாகவும், மலம் இயல்பான நிறத்திலும் போகும்.
மஞ்சள் காமாலை வருவதற்கான காரணங்கள்:
* பரம்பரைத் தன்மை
* ரத்தத்தில் பித்த நீரின் அளவு அதிகரித்தல்
* கல்லீரலை பாதிக்கும் சில நோய்கள்
* பித்த நீர்ப்பை மற்றும் பித்தநீர்க் குழாயில் ஏற்படும் அடைப்பு
* ரத்த சிவப்பணுக்களின் சிதைவு
* மது அருந்துதல்
* மற்ற நோய்களுக்காக எடுக்கப்படும் அலோபதி மருந்துகள்
* மாசு பட்ட தண்ணீரில் காணப்படும் நோய்க்கிருமிகள் போன்றவை.
அறிகுறிகள்:
* பசியின்மை
* சோம்பல்
* களைப்பு
* வாந்தி
* குமட்டல்
* தலைவலி
* உடல் எடை குறைவு
* உடலில் அரிப்பு
* சாதாரண காய்ச்சல் அல்லது குளிர்க்காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும்.
* காமாலை முற்றிய நிலையில் தோல் பகுதி, கண்கள் மற்றும் நகப் பகுதிகள் மஞ்சளாகவும் சிறுநீர் மற்றும் மலம் மஞ்சள் நிறத்துட னும் காணப்படும்.
சிகிச்சை:
முற்றிய வேப்பிலை, வில்வ இலை, கீழா நெல்லி, தும்பையிலை, சிறிது மஞ்சள் தூள் ஆகியவைகளை சம அளவு பறித்து வந்து ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு தம்ளர் ஆகுமாறு அடுப்பில் வைத்து வற்றக் காய்ச்சி பின் வடிகட்டி காலை, மாலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக நோய் தீரும்வரை உட்கொள்ளவும்.
அல்லது மேற்கூறிய மூலிகைகளை பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதிலிருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்குஒரு மணி நேரம் முன்பாக தினம் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளையும் நோய் தீரும் வரை உட்கொள்ளலாம்.
உணவுமுறை:
நோயாளிகள் தினம் ஒருவேளை இயற்கை உணவுகளையும் மற்ற இரண்டு நேரம் எளிதில் ஜீரணமாகக்கூடிய சாதாரண சைவ உணவுகளை மட்டும் உட்கொள்ளவும். இதில் அவரவர் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்ளலாம். இயன்றவரை உப்பை குறைத்து உண்ணவும். இவ்வாறு செய்தால் மஞ்சள் காமாலையை முறியடிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக